Wednesday 25 April 2012

கருவுறுதல் முதல் குழந்தை பிரசவிக்கும் வரை...(பாகம் - 1)


கருவுறுதல் முதல் குழந்தை பிரசவிக்கும் வரை...(பாகம் - 1)அச்சிடுகமின்-அஞ்சல்
21 ஏப்ரல் 2012 மாலை 11:26
மனித இனம் ஆரம்பத்தில் படைக்கப்பட்டது முதல், இன்றுவரை, ஏன் இன்னும் உலக முடியும் வரை பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வருவதற்காண முக்கியமான ஒரு நிகழ்வு தான் இனபெருக்கும். இனபெருக்கதிற்க்குமிக அவசியம், ஆணின் விந்தும் , பெண்ணின் சினை முட்டையும் ஒன்றாக இணையும் fertilization என்ற நிகழ்வு தான்.
இந்த கருவுறுதல் பற்றி அறியும் முன், ஆண் மற்றும் பெண்ணின் இனபெருக்க உறுப்புகள், அதன் செயல்பாடுகள், மாதவிடாய் சுழற்சி போன்றவைகளை பற்றி தெரிவது அவசியம்.
இந்த தொடரில் ஆணின் விந்தில் தொடங்கி முழு குழந்தையாகும் வரையுள்ள நிகழ்வுகளை சுருக்கமாக பார்க்க இருக்கிறோம்,
இந்த இனபெருக்கவியல் மற்றும் கருவியல் தொடர், தமிழில் விளக்குவதற்கு கொஞ்சம் கஷ்டமான பாடம் என்றாலும், என்னால் முடிந்த அளவுக்கு விளக்குகிறேன். வரிக்கு வரி கவனமாக வாசித்தால் புரிவது சுலபம். இந்த கட்டுரை, நிச்சயம் மருத்துவம் சார்ந்த துறை, மற்றும் கல்லூரி உயிரியல் துறை மாணவ மாணவியர்களுக்கும்,மற்றும் பெண்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்..
இந்த தொடர் கட்டுரையில், நாம் இது வரை கேள்விபட்டிறாத, ஆனால் கருவறையில் சர்வ சாதாரணமாக நடக்கும் ஆச்சிரியமான நிகழ்வுகளும் வர உள்ளன. அதனுள் ஆழமாக செல்லுமுன் ,முதலில் பெண்ணின இனப்பெருக்க உறுப்புகள் பற்றி சற்று விவரமாக பார்ப்போம்.
மாதவிடாய் சுழற்சி (MENSTRUAL CYCLE )- உடல் கூறுயியல் விளக்கம்:-
மாதவிடாய் சுழற்சிக்கும், பெண் கருவுருவதற்கும், முக்கியமான பெண் உறுப்பு uterus என்னும் கர்ப்பை, fallopian tube என்ற கருக்குழாய்,மற்றும் ovary என்னும் சினைப்பை மட்டும்தான் என்று எல்லோரும் அறிந்துள்ளோம்..இதை எல்லாம் மீறி, இந்த உறுப்புகளையும் சேர்த்து மாஸ்டர் கண்ட்ரோல் பண்ணும் இன்னும் இரண்டு உறுப்புகள் உள்ளன. அதில் ஒன்று HYPOTHALAMUS , மற்றொன்று PITUITARY GLAND.
pituitary_1
Hypothalamus
இது மூளையில் உள்ள வரையறுக்கபடாத ஒரு சிறு பகுதி. ஆனால் இது பெரிய பெரிய செயல்களை செய்கிறது. மனித வாழ்வில் எல்லா நிலைகளிலும் இந்த hypothalamus முக்கிய பங்கு வகிக்கிறது.. இதில் இருந்து தான், பெண் இனவிருத்தி, மற்றும் மாதவிடாய்க்கு தேவையான GnRH என்னும் ஹோர்மோன் உற்பத்தியாகிறது. இந்த GnRH ஹோர்மோன் நேராக PITUITARY Gland என்னும் நாளமில்லா சுரப்பியில் தனது ஆதிக்கத்தை செலுத்துகிறது.
இரத்தத்தில் உள்ள பெண்ணின ஹோர்மோன்களான ஈஸ்ட்ரோஜென் (estrogen ) மற்றும் புரஜெஷ்டரோன்(progesterone ) அளவை பொறுத்து, மிக துல்லியமாக கூடியோ குறைந்தோ , இரத்தத்தில் இந்த ஹோர்மோன் களின் அளவை கட்டுக்குள் வைத்து, பெண்மை தடை இன்றி காப்பாற்றப்பட உதவுகிறது.
Pituitary GLAND
இது மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த நாளமில்லா சுரப்பியின் முன் பகுதியான Anterior Pituitary மீது, hypothalamus சுரந்த GnRH ஹோர்மோன் , செயல்புரிந்து, அதை தூண்டி , அதிலிருந்து FSH மற்றும் LH என்னும் இரு ஹோர்மோன்கள் சுரக்கிறது.இந்த இரு ஹோர்மோன்களும்,பெண்ணின ஹோர்மோன் களான ஈஸ்ட்ரோஜென் (estrogen )மற்றும் புரஜெஷ்டரோன்(progesterone ) அளவை பொறுத்து, மிக துல்லியமாக கூடியோ குறைந்தோ , இரத்தத்தில் இந்த ஹோர்மோன் களின் அளவை கட்டுக்குள் வைத்து, பெண்மை தடை இன்றி காப்பாற்றப்பட உதவுகிறது. இது பெண்ணின ஹோர்மொன்களை கட்டுபடுததினாலும், இது GnRH ஹோர்மொனின் கட்டுபாட்டுக்குள் தான் உள்ளது. இந்த FSH , LH ஹோர்மோன்கள் இரத்தம் மூலம் சென்று , சினைப்பையான ovary மீது தனது படையெடுப்பை செய்கிறது.
image001
சினைப்பை என்னும் Ovary
பெண்ணின் இடுப்பு பகுதியில் , கர்ப்பைக்கு இருபுறமும் சிறிய உருண்டை வடிவில் இந்த உறுப்பு இருக்கிறது. FSH , LH ஹோர்மோன் களின் உந்துதலால்,பெண்ணின ஹோர்மோன் களான ஈஸ்ட்ரோஜென் (estrogen )மற்றும் புரஜெஷ்டரோன்(progesterone ) ஆகியவற்றை இந்த Ovary சுரக்கிறது.
இந்த சினைப்பையில், லட்சகணக்கான முதிர்வடையாத (Immature follicle ) உள்ளது. ஒரு கணக்கின்படி , கருவில் இருக்கும் பெண் சிசுவின் சினைப்பையில் சுமார் 60 முதல் 70 லட்சம் immature follicle உள்ளது. பச்சிளம் குழந்தையின் சினைப்பையில் , இந்த immature follicle 6 லட்சமாக குறைந்து,.சிறுமியாக வளர்ந்து வயதிற்கு வரும் போது வெறும் 2 லட்சமாக குறைகிறது.மாதவிடாய் நிற்கும் போது இந்த immature follicle எண்ணிக்கை வெறும் 10000 திற்கும் குறைவாகி, இறுதியில் சுருங்கி விடுகிறது.
ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் போது, இந்த லட்சகணக்கான immature follicle களில், ஒன்றே ஒன்று மட்டும் தான் முதிர்வு (mature ) அடைந்து mature follicle ஆகிறது. எத்தனை மில்லியன் immature follicle இருந்தாலும்,அதில் குறைந்தது ஒரு follicle க்கு கூட முதிர்வடையும் (mature ) ஆகும் தன்மை இல்லாவிட்டால், கருவடைதல் நடக்கவே நடக்காது. ஆனால் ஒரே ஒரு follicle மட்டும் முதிர்ச்சி அடையும் தன்மை இருந்தால் போதும், கருவடையும் தன்மை வந்து விடும் (மற்ற காரணிகளும் சரிவர இருந்தால் ).
பெண்ணின ஹார்மோன்கள்
பெண்ணின ஹோர்மோன் களான ஈஸ்ட்ரோஜென் (estrogen )மற்றும் புரஜெஷ்டரோன்(progesterone ), ஒரு பெண்ணின்கருப்பை வளர்ச்சியடைய வைத்து, பெண்ணை தாய்மை அடையும் நிலைக்கு கொண்டு வரக்கூடியதும்,பெண்ணிற்கு பெண்மைக்கான அங்க அவயங்கள் வளர வைக்ககூடியதும், பெண்ணை திருமண வாழ்க்கைக்கு தயார் பண்ண கூடியதாக இருக்கிறது. இந்த ஹோர்மோன் நேராக கருப்பை மீது தனது படையெடுப்பை செலுத்தினாலும்,மற்ற உறுப்புகளிலும் தனது ஆளுமையை செலுத்துகிறது.
பெண்ணின ஹோர்மோன் களான ஈஸ்ட்ரோஜென் (estrogen )மற்றும் புரஜெஷ்டரோன்(progesterone ) அளவு இரத்தத்தில் அதிகரிக்கும் போது, அதை GnRH ஹோர்மோன், மிகத்துல்லியமாக கணக்கிட்டு , தனது ஆற்றலால் FSH , LH சுரப்பை குறைத்து , அதனால் ஓவரி தூண்டபடுவது குறைந்து , இந்த ஹோர்மோன் களின் சுரப்பு குறைந்து, நார்மல் நிலைக்கு வருகிறது. அதைப்போல் ஈஸ்ட்ரோஜென் (estrogen )மற்றும் புரஜெஷ்டரோன்(progesterone ) அளவு இரத்தத்தில் குறையும்போது போது, அதை GnRH ஹோர்மோன், மிகத்துல்லியமாக கணக்கிட்டு , பின் FSH , LH சுரப்பை அதிகரித்து , அதனால் ஓவரி தூண்டபடுவது அதிகமாகி , இந்த ஹோர்மோன் களின் சுரப்பு அதிகரித்து , நார்மல் நிலைக்கு வருகிறது.
fallopian tube என்னும் கருக்குழாய்
பெண் இனப்பெருக்கத்திற்கு, மேலே சொன்ன உறுப்புகள் போக, fallopian tube என்ற கருகுழாய் போன்ற அமைப்பு கொண்ட உறுப்பு , இரு Ovary அருகில் இருபுறமும் துவங்கி, கருப்பை என்னும் uterus இன் உட்புறத்தில் முடிகிறது. சினைப்பையில் இருந்து வெளியான சினை முட்டையை இந்த tube வெளிப்புறம் இருக்கும் கை போன்ற fimbriae எடுத்து, fallopian tube உட்புறம் அனுப்பும். இந்த fallopian tube உட்புறத்தில் தான், இந்த சினைமுட்டை, ஆணின் விந்துவுடன் இணைந்து கருவுறுகிறது. fallopian tube உட்புறம் , சிறிய cilia போன்ற முடி போன்ற அமைப்பு உள்ளதால், இந்த cilia வின் உதவியால் தான், கருவுற்ற முட்டை கருப்பை நோக்கி தள்ளப்பட்டு, கருப்பையில் தஞ்சம் அடைகிறது.
கருப்பை என்னும் Uterus
கருப்பை என்ற உறுப்பு இரண்டு பாகங்களை கொண்டது.ஒன்று கருப்பையின் உடல் (body of uterus ) மற்றொன்று கருப்பையின் கழுத்து ,cervix என்று பெயர்.இதன் வெளிபகுதிக்க்கு கருப்பை வாய் என்றும் பெயர். கருப்பையில் , பல அடுக்கு சுவர்கள் இருந்தாலும், முக்கியமான, மாதவிடாயில் அதிக பங்கு வைப்பது, endometrium எனப்படும் உட்சுவர் ஆகும். கருவுற்ற சினை முட்டையை, கருப்பை , fallopian tube இல் இருந்து தன்னுள் வாங்கி, இந்த endometrium சுவற்றில் தான் பதித்து கொள்கிறது.
மேற்கூறிய எல்லா உறுப்புகளும் மாதவிடாய் மற்றும் கற்பத்தில் முக்கிய பங்கு வகித்தாலும், cervix எனப்படும் கருப்பைவாய் , பிரசவத்தின் போது, பெரிய பங்கு கொள்கிறது,uterus உடன் சேர்ந்து.
மாதாவிடாய் எப்படி நடக்கிறது என்பதை பின்னர் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்....
ஆக்கம் : டாக்டர். டி முஹம்மது கிஸார்,
குழந்தை நல மருத்துவர்,
சென்னை.

Labels:

ஒற்றுமை காலத்தின் தேவை, சன்மார்க்கக் கடமை:


ஒற்றுமை காலத்தின் தேவை, சன்மார்க்கக் கடமை:

''முஷ்ரிகீன்களில் நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் தங்கள் மார்கத்தில் பிரிவினையை உண்டு பண்ணி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.(அவர்கள்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ளதை வைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.''
(ஸுரா : அர்ரூம் :32)
''எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தம் இஷ்டப்படி) பிரித்து (அவர்களும்) பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உமக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை.''
(அல் அன்ஆம் :159)

ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் ஒருவரையொருவர் வெறுத்துக் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்;;(பகைத்துக்கொண்டு) புறம் காட்டிச் செல்லாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாக விளங்குங்கள். மேலும் ஒரு முஸ்லிம் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைத்துக்கொண்டிருத்தல் கூடாது.' (புகாரி,முஸ்லிம்)

இன்றைய உலகம் பூகோள ரீதியில் இஸ்லாத்தினதும், முஸ்லிம் சமூகத்தினதும் எழுச்சியை, மறுமலர்ச்சியைக் கண்டுகொண்டிருக்கிறது. எவராலும் மறுக்கமுடியாத அளவுக்கு இவ்வெழுச்சி படியாத பாமரர், படித்த வாலிபர் உட்பட ஆண், பெண் எல்லோரையும் தழுவிய உலகின் சந்து பொந்துகளிலெல்லாம் வியாபித்து நிற்கும் ஒன்று என்ற வகையில் மிகவும் பலமிக்கதாக விளங்குகின்து.

இந்த உலகலாவிய இஸ்லாமிய எழுச்சியானது முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இலங்கை போன்ற நாடுகளிலும் கூட அதன் தாக்கத்தை ஏற்படுத்துத்தியுள்ளது.

ஆயினும் இவ்வெழுச்சிக்கு பல தடைகள் உருவாகியுள்ளமை கவலைக்குறியதாகும். அவை இவ்வெழுச்சியின் விளைவுகளைத் தாமதப்படுத்தியும், இல்லாமல் செய்தும் வருகின்றன. அத்தiகைய தடைகளுள், குறிப்பிட்ட சிலரது அவசரப்போக்கு, நிதானமற்ற அணுகுமுறைகள், தீவிரப்போக்கு ஆகியன குறிப்பிடத்தக்கவை.

1. தீவிரமும் நிதானமின்மையும்

இங்கு நாம் 'தீவிரம்;' என்ற சொல்லை இஸ்லாத்தின் எதிரிகள் குறிக்கும் 'தீவிரவாதம்' என்ற கருத்தில் பயன்படுத்தவில்லை. அவர்களோ தூயமுஸ்லிம்கள் அனைவரையும் மதத்தீவிரவாதிகள், அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் போன்ற பெயர்களில் சுட்டுகின்றனர். ஆயினும் இஸ்லாத்தின் பெயரால் சிலர் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் எதிரிகளின் இத்தகைய குற்றச்சாட்டுக்களை உண்மைப்படுத்துவது போல அமைவதுதான்; வேதனைக்குரியதாகும். இத்தகையவர்களின் நிதானமற்ற போக்கு இஸ்லாமிய எழுச்சியையும் அதனடியாக எழுந்துள்ள இஸ்லாமிய மறுமலர்ச்சியையும் பெரிதும் பாதித்து வருகின்றது. எனவே இத்தகையவர்கள் நிதானத்தைக் கைக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். 'அவசரப்படுதல் ஷைத்தானிலிருந்தும் உள்ளது. நிதானமும் அமைதியும் அல்லாஹ்விடமிருந்தும் உள்ளது.' என்ற நபிமொழி எமது கவனத்திற் கொள்ளத்தக்கதாகும். (திர்மிதி)

'ஷிர்க்' போன்ற பெரும் பாவங்களை எதிர்ப்பதிலும், ஒழிக்க முற்படுவதிலும் கூட நிதானம் கடைபிடிக்கப்படல் வேண்டும்; நன்மையான விடயங்களை செய்வதில் கூட அளவு கடந்த அவசரமும், நிதானமிழந்த போக்கும் வரவேற்கத்தக்கதல்ல. பதறிய காரியம் சிதறும் என்பார்கள். பொறுத்தவன் புவி ஆள்வான்;. பொறுமை இழந்தவன் காடேருவான் என்பது முதுமொழி. இன்று உலக மட்டத்திலும் சரி எமது நாட்டு மட்டத்திலும் சரி எமது அவசரத்தின் காரணமாகவும், நிதானமிழந்த போக்குகளின் காரணமாகவும் நாம் பல கஷ்டங்களை அனுபவித்தும், நஷ்டங்களை அடைந்தும் வருகின்றோம். சமூக மாற்றம் என்பது ஓரிரவில், ஒருபகலில் ஏற்படக்கூடியதல்ல என்பதை நாம் உணர வேண்டும். அது படிப்படியாக, கட்டம் கட்டமாக ஏற்படக் கூடியதாகும். அத்தகைய மாற்றம்தான் ஆரோக்கியமானதும் நிலைக்கக் கூடியதுமாகும். அவசரத்தில் தோன்றுகின்ற செயற்கையான மாற்றங்கள் போலியானவை. நிலைக்காதவை.

எமது முயற்சிகளுக்குரிய விளைவுகளை நாம் கண்டேயாக வேண்டும் என்று சிந்திப்பதும் அதற்காக எத்தகைய வழிமுறைகளையும் கையாள முயற்சிப்பதும் இஸ்லாமிய அணுகுமுறைகளல்ல. முயற்சிப்பதே எமது கடமை; விளைவுகள் அல்லாஹ்வின் கரங்களில். நாம் எமது முயற்சிகள் பற்றி விசாரிக்கப்படுவோமேயன்றி விளைவுகள் பற்றி கேட்கப்படமாட்டோம். மேலும் எமது இலக்குகள் புனிதமானவையாக இருப்பது போலவே அவற்றை அடைவதற்கான வழிமுறைகளும் புனிதமானவையாக அமைதல் வேண்டும் என்ற இஸ்லாமிய சட்டவிதியை நாம் மறந்துவிடக்கூடாது.

2. வேற்றுமைகளும் முரண்பாடுகளும்

இன்றைய இஸ்லாமிய எழுச்சிக்கு உருவாகியுள்ள மற்றுமொரு பெருந்தடை எம்மத்தியில் தோன்றியுள்ள வேற்றுமைகளும் முரண்பாடுகளுமாகும். அசத்தியக் கொள்கைகளைக் கொண்டவர்கள் கூட தம்மத்தியிலுள்ள வேற்றுமைகளை மறந்து ஒற்றுமை காண முயற்சிக்கின்ற காலமிது. தம்மத்தியில் பயங்கர முரண்பாடுகளைக் கொண்ட பல சக்திகளும் இன்று இஸ்லாம் என்ற பொது எதிரியைச் சந்திப்பதற்காக உடன்பட்டுச் செயற்படுவதைக் காண முடிகின்றது. இந்நிலையில் முஸ்லிம்களாகிய நாம் ஒற்றுமையில் வேற்றுமையைத் தேடுபவர்களாக இருக்கின்றமை எவ்வளவு துரதிஷ்டமானது.!
இன்று நாம் எல்லா வளங்களையும், பலங்களையும் நிறைவாகப் பெற்றிருந்தும் எமது விவகாரங்களில் அடுத்தவர் தலையிடும் அளவுக்கும் தீர்மானங்கள் எடுக்கும் அளவுக்கும் உலக அரங்கில் பலயீனர்களாக மாறியுள்ளமைக்கு பிரதானமான காரணம் எமது ஐக்கியமின்மையாகும். அல்-குர்ஆன் இந்நிலைமையைப் பின்வருமாறு விளக்குகின்றது:

''நீங்கள் உங்களுக்குள் சர்ச்சைப்பட்டுக் கொள்ளாதீர்கள்; அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்து உங்கள் வலிமை குன்றிவிடும்'' (அன்பால்: 46)

நாம் எமது முரண்பாடுகளைக் கண்டு கொள்வது போல எம் மத்தியிலுள்ள உடன்பாடுகளைக் கண்டுகொள்வததில்லை. அவற்றை நாம் காண்பதை ஷைத்தான் விரும்புகின்றானில்லை. எம் மத்தியில் பகைமையும,; குரோதமும் நிலைக்க வேண்டுமென்பதுதானே அவனது விருப்பம்.

நாம் முரண்படுகின்ற விடயங்கள் ஐந்து என்றால் உடன்படுகின்ற அம்சங்கள் ஐம்பது இருக்கின்றன. இவ்வுண்மையை எம்மால் புரிந்து கொள்ள முடியுமென்றிருந்தால் எமது சமூக, சன்மாரக்க நிலைகள் எவ்வளவு ஆரோக்கியமடையும்.! அர்க்கானுல் ஈமான் எனும் ஈமானின் அடிப்படைகளிலும், அர்க்கானுல் இஸ்லாம் எனும் இஸ்லாமியக் கடமைகளிலும் எம்மத்தியில் பலத்த கருத்து வேறுபாடுகள் இல்லை என்றே கூற வேண்டும். சன்மார்க்கத்தின் உஸுல் (அடிப்படைகள்) கவாயித் (விதிகள்) புரூழ்கள் (கடமைகள்) கபாயிர் (பெரும் பாவங்கள்) முதலானவற்றிலும் எம்மத்தியில் அபிப்பிராயபேதங்கள் குறைவு எனலாம். கருத்து வேறுபாடு நிலவுவதெல்லாம் புரூஃ (கிளை அம்சங்கள்), நாவாபில் (ஸுன்னத்துக்கள்), ஸகாயிர் (சிறுபாவங்கள்) போன்ற ஒப்பீட்டு ரீதியில் முக்கியத்துவம் குறைந்த விடயங்களிலாகும். 'காயாத்' எனும் இலக்குகளைப் பொறுத்தவரையில் எம்மத்தியில் முரண்பாடுகள் குறைவு. அவற்றை அடைவதற்கான 'வஸாயில்' எனும் வழிமுறைகளிலும், அணுகுமுறைகளிலும்தான் சில உடன்பாடற்ற நிலைகள் காணப்படுகின்றன. இத்தகைய விடயங்களில் முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுப்பதில் தவறில்லை. ஒவ்வொருவரும் தத்தமது நிலைப்பாடுகளுக்கு உரிய சன்மார்க்க ஆதாரங்களை கொண்டிருக்கும் வரை எத்தகைய ஆட்சேபனையும் தெரிவிப்பதற்கில்லை. ஆனால் இவ்விடயங்களில் ஏற்படும் 'கிலாபுகள்' (வேறுபாடுகள்) எம்மத்தியில் 'ஷிகாக்கை' (பிளவுகளை) தோற்றுவிக்கலாகாது. கருத்து முரண்பாடுகளின் போது எமது முனனோர்கள் கைக்கொண்ட ஒழுங்குகளை கடைபிடிக்கப்படாமையினாலேயே இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு விடயத்தில் நான் ஒரு கருத்தை கொண்டிருக்கலாம், மற்றொருவர் அதில் என்னோடு முரண்படுகின்ற போது அவர் முஃமினாக இருக்கும் வரை அவருடன் மிகவும் பண்பாடாக நடந்து கொள்ள வேண்டும் என்பது மார்க்கக்கடமையாகும்.

'இது விடயத்தில் எனது கருத்து சரியானது. அது பிழையாக இருக்கவும் இடமுண்டு. இது விடயத்தில் அடுத்தவரின் கருத்து பிழையானது. அது சரியாக இருக்கவும் இடமுண்டு.' இக் கூற்று எமது முன்னோர்கள் கருத்து வேறுபாடுகளின் போது கைக்கொண்ட 'ஆதாபுகளுக்கு' ஒரு சிறந்த உதாரணமாகும்.

காபிரகளுடன் கூட ஆதாரங்களை முன்வைத்து அழகாகவும், பண்பாடாகவும் விவாதிக்குமாறு அல்-குர்ஆன் பணிக்கின்றது.'மேலும் அவர்களுடன் சிறந்த (பண்பாடன) முறையில் விவாதிப்பீராக.' (16:125) ஆனால் நாமோ நமது சகோதர முஸ்லிம்களுடன் முரண்படுகின்ற போதெல்லாம் காரசாரமான வாதப்பிரதிவாதங்களிலும் தர்க்க குதர்க்கங்களிலும் ஈடுபடுகின்றோம். ஈமானிய உறவை மறந்து சொல்லம்புகளால் தாக்குகின்றோம். சொல்லால் மட்டுமன்றி கையால், கல்லால் அடிக்கவும் நாம் தயங்குவதில்லை. சில போது எமது நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக அடுத்த சகோதரர்கள் மீது பழி சுமத்துவதற்கும், அபாண்டங்களைக் கூறுவதற்கும் நாம் துணிந்து விடுவதுண்டு. மொத்தத்தில் மார்க்கத்தின் பெயரிலேயே அது கூறும் சகோதரத்துவம், அன்பு, ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு முதலான பண்புகளுக்கு நாம் சாவு மணி அடிக்கின்றோம். முஃமின்கள் தம்மத்தியில் அன்புடனும் ஆதரவுடனும் இருப்பார்கள். நளினமாகவும் நயமாகவும் நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் குறிப்பிடும் அல்குர்ஆனின் போதனைகளை காற்றில் பறக்க விடுபவர்களாக நாம் இருக்கின்றோம்.

3. குறைந்த சன்மார்க்க அறிவு
உண்மையில் எமது நாட்டைப் பொறுத்தவரையில் எம்மத்தியில்லுள்ள பிரிவுகளும் பிரிவினைகளும் பெரும்பாலும் எமது சன்மார்க்க அறிவிலுள்ள குறைபாட்டினால் உருவானவையாகும். இவ்வாறு சன்மார்க்க அறிவிலுள்ள கோளாரின் காரணமாகவே ஒவ்வொரு குழுவினரும் தாம் மாத்திரமே சரி என்றும் தம்மை மாத்திரம் 'அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ' அமைப்பாக இனம் காட்டி தம்முடன் சிற்சில விடயங்களில் முரண்படுகின்ற பிற இஸ்லாமியச் சகோதரர்களை அதற்;கு அப்பால் இருப்பவர்களாக பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். மேலும், இலங்கை முஸ்லிம் சமூகத்தில் தஃவாக்களத்தில் - அறிவும் அறிவும் மோதுவதாக தெரியவில்லை; அறிவும் அறியாமையும் முட்டிக்கொள்வதையும் காண்பது அரிது. அறியாமையும் அறியாமையுமே முட்டி மோதி சமூகத்தில் புரளிகளை கிளப்புவதைப் பார்க்க முடிகின்றது. மேலும் குறுகிய இயக்க வாதங்கள், தனிமனித பலவீனங்கள், தப்பபிப்பிராயங்கள் முதலானவையும் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து வருகின்றன.

4. உலமாக்களின் கடமை

இவ்வாரோக்கியமற்ற நிலை மிக அவசரமாக மாற்றப்படல் வேண்டும். இல்லாத போது இன்று நாம் காணும் இஸ்லாமிய எழுச்சியின் விளைவுகள் பூச்சியமாகி விடும் பேராபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போய்விடும். இங்கு உலமாக்களின் பணி அவசியமாக வேண்டப்படுகின்றது. குறுகிய இயக்க வாதங்களை மறந்து அவர்கள் சமூகத்தின் ஒற்றுமைக்காக உழகை;கும் மகத்தான பொறுப்பை சுமந்தாக வேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் முஸ்லிம் உம்மத் பலயீனமுற்ற சந்தர்பங்களிலெல்லாம் அதனை பலப்படுத்தி கட்டிக்காத்த பெருமை அவ்வக்கால உலமாக்களையே சாரும். இறையச்சமும், நிறைந்த அறிவும், துணிச்சலுமிக்க ஒரு தலைமைத்துவம் எம் சமூகத்திற்கு இன்று தேவைப்படுகின்றது. இது ஒரு தனிமனித தலைமைத்துவமாகவன்றி ஒரு கூட்டு தலைமைத்துவமாக அமைவதே தற்போதைக்கு சாத்தியமானதாகும். இதற்காக நாம் என்றும் வலியுறுத்துவது போல அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் நிழலின் கீழ் எல்லா உலமாக்களும் தம்மத்தியிலுள்ள சிறுசிறு பேதங்களையும் மறந்து அணிதிரளவேண்டும். உடன்பாடான விடயங்களை கண்டறிந்து அவற்றில் அனைவரும் இணைந்து செயற்படவும், முரண்படும் விடயங்களில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும் எமது உலமாக்கள் முன்வர வேண்டும். இதுவே இஸ்லாமியப் பண்பும், எமது முன்னோர்களின் முன்மாதிரியுமாகும்.

இந்த மாற்றம் மிக விரைவில் ஏற்பட வேண்டும் என்பதே இஸ்லாமிய நலன்விரும்பிகளின் வேணவாவாகும். உலமாக்களே! உங்களை கடமை அழைக்கிறது. கட்டுக்களை அவிழ்த்து (உம்மத்தின் நலன்) கருதி களத்திற்கு வர எல்லாம் வல்ல அல்லாஹ்வை இந்தப் புனிதமான மாதத்தில் பிராத்திப்போமாக.

அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத்

Labels:

Monday 23 April 2012


உணவை வீணாக்காதீர்கள்..!
13TH APRIL, 2012
digg

உணவை வீணாக்காதீர்கள்..!

சவுதியில் ஏறத்தாழ 25 வருடங்கள் இருந்த காலங்களில் கீழ்கண்டுள்ள வகையிலான பல விருந்துகளில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. விருந்தின் போது மித மிஞ்சிய உணவு வகைகளைக் கண்டு நெஞ்சம் அழுததுண்டு. இறைவன் அங்கு செல்வத்தை வாரி வழங்கியுள்ளான். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு இன்று வரை தெரியாதது தான் உண்மை. ரமலான் காலங்களில் காலையில், குடியிருப்பு பகுதியிலுள்ள குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழியும் பல வகையான மிஞ்சிய உணவுகளால். இதைப் பற்றி ஏற்கனவே நான் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறேன். இனி தொடர்ந்துப் படியுங்கள். ஒரு கொசுறு செய்தி: சவுதியில், பெண் பிச்சைக் காரர்கள் கூட கை முழுக்க தங்க? வளையல்கள் அணிந்து கொண்டு பிச்சை எடுப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஹூம்..இப்படியும் செல்வம் பொங்கி வழியும் ஒரு உலகம்…..இதற்கு அண்டை நாடான ஆப்ரிக்காவும் வேறொரு உலகம்(வறுமை வாட்டியெடுக்கிறது அங்கு)
உணவை வீணாக்காதீர் ..!
பொதுவாக அரபிகள் தங்களுக்கு எவ்வளவு தேவையோ அதற்கும் மிஞ்சித்தான் உணவை சமைக்கிறார்கள் அல்லது ஓட்டலில் ஆர்டர் கொடுத்து வாங்குகிறார்கள். சாப்பிட்டது போக எஞ்சியது இறுதியாக குப்பைக்கே போகிறது.  மேலும் உணவு சமைக்கவோ அல்லது ஓட்டல்களில் ஆர்டர் செய்யும்போதோ படு ரிச்சான உணவு வகைகளையே நாடுகின்றனர். அதிலும் ரமளான் என்றால் கேட்கவே வேண்டாம்..! உணவு மிஞ்சிப்போதல் மற்ற மாதங்களைவிட இப்போதுதான் கூடுதலாகிறது..!  இவையெல்லாம் வெறும் பெருமைக்காக செய்யப்படுவதாகவே நான் உணர்கிறேன்.
ரமலானில் வளைகுடா நாடுகளில் உள்ள உணவு வீணாக்கல் பற்றி சில நாட்களுக்கு முன்னர் வந்த அரப் நியுஸும் அதற்கு முன்தினம் வந்த யாஹூ நியுஸும் இதையேதான் உறுதிப்படுத்தியது. துபாயில் ரமளானின் ஒவ்வொரு நாளும் 1850 டன் உணவுப்பொருட்கள் வீணாக்கப்படுகின்றதாம்..!இதுவே அபுதாபியில் 500டன் என்றஅளவுக்கு வீணாக்கப்படுகின்றதாம்..! பொதுவாக அமீரகத்தில் ரமளானில் 15 முதல் 20 % உணவு மற்ற மாதங்களை விட அதிகம் வீணாகிறது என்கிறது அந்த செய்தி. .
UAE Red Crescent அமைப்பு என்ன செய்கிறது எனில், இது போன்ற தேவைக்கு மிகுதியான கைவைக்கப்படாத உணவை, பிரிக்கப்படாத ஓட்டல் உணவு ஆர்டர்களை அப்படியே எடுத்துச்சென்று தேவைப்படுவோருக்கு கொடுத்து விடுகிறதாம். இதுபோன்று கடந்த ரமளானில் மட்டும் 24,535 ஹாட் மீல்ஸ் அயிட்டங்களை தேவையுடைய ஆயிரம் குடும்பத்திற்கும் பத்தாயிரம் தொழிலாளர்களுக்கும் உடனடியாக சப்ளை செய்துள்ளதாக அந்த அமைப்பின் இயக்குனர் தெரிவிக்கிறார். .
The General Authority of Islamic Affairs and Endowment (Awqaf) என்ற அமைப்பு தங்கள் "Think before you waste"என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை ஜும்மா சொற்பொழிவுகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இதை ஒரு முடிவுக்கு கொண்டு வர புறப்பட்டுள்ளனாராம். .
உலகில் கோடான கோடி மக்கள் பட்டினியால் வாடும்போது அல்லாஹ் உங்களுக்கு நிறைவான உணவை வழங்கியிருக்கும்போது அதனை வீண் விரயம் செய்வது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை இவர்கள் உணரவேண்டும்..!
வீம்புக்காக விண்ணை முட்டும் அதிஉயர ஆடம்பர சொகுசு மாளிகைகளை கட்டிக்கொண்டு வீண்விரையம் செய்வோரை மிகக்கடுமையாக சாடுகிறது இஸ்லாம்.
இவர்களைப்பற்றி தன் திருமறையில் இறைவனின் எச்சரிக்கை யாதெனில்...
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை (வீணாக) செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன் (அல்குர்ஆன் 4:36)
வீண் விரையம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன் 6:141)
உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்7:31)
மனிதர்கள் எந்த அளவுக்கு எளிமையாக இருக்க வேண்டுமானால்... சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழும் சிறு துண்டு உணவைக்கூட எடுத்து துடைத்து விட்டு சாப்பிடச்சொல்கிறது இஸ்லாம். இதுபற்றி இறைத்தூதர் நபி(ஸல்...) அவர்கள் கூறியிருப்பதாவது...
''உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒருத் துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும் அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம்" என்று நபி (ஸல்...)அவர்கள் அறிவுருத்தினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்கள்: முஸ்லிம், அஹமத், அபூதாவூத், திர்மிதி)
இப்படி சொல்லப்பட்ட ஒரு மார்க்கத்தில் இருப்பதாக கூறிக்கொண்டே இந்த அளவுக்கு இவர்கள் உணவுபொருட்களை வீணடிக்கின்றனர் எனில் அதற்கு காரணம் இவர்களிடம் தலையில் ஏறி அமர்ந்திருக்கும் செல்வச்செருக்கு அன்றி வேறென்ன..? இதைக்கூட நபி(ஸல்...) அப்போதே சொல்லிக்காட்டியும் விட்டார்கள்.
வறுமையைப் பற்றி பேசிக் கொண்டும், அதுபற்றி அச்சம் தெரிவித்துக் கொண்டும் நாங்கள் இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி வந்து 'வறுமையை (நினைத்தா) அஞ்சுகிறீர்கள்? எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக (வருங்காலத்தில்) இந்த உலக(த்துச் செல்வ)ம் ஒரேயடியாக உங்கள் மீது பொழியப்படும்! உங்களின் உள்ளத்தை (நல்வழியை விட்டும்) ஒரேயடியாக திசை திருப்பிவிடக் கூடியதாகத் தான் அந்தச் செல்வம் அமையும். ... .... என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:இப்னுமாஜா)
''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனையுண்டு. என்னுடைய சமுதாயத்திற்கு செல்வம் சோதனையாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் இயாஸ் (ரலி) (நூல்கள்: திர்மிதீ 2258, அஹ்மத் 16824)
'அவர்கள் வாங்குகிறார்கள்... அவர்கள் வீணடிக்கிறார்கள்... நமக்கென்ன' என்று நாம் சும்மா இருக்க முடியாது சகோ..! .
இப்பதிவின் மூலம் சொல்ல வருவது யாதெனில்...
உணவு என்பது இவ்வுலகுக்கு இறைவனின் அருட்கொடை. அது ஒரு பொதுச்சொத்து. அதை அவர்கள் மிகுதியாக வாங்கி இறையச்சமின்றி வீணடித்தால் அதன் பிரதிபலிப்பு ஏழை நாடுகளில் பட்டினிச்சாவில் தெரியும்.
பெரும்பணக்கார நாடு ஒன்று பேரல்பேரலாக இவர்களிடம் கச்சா எண்ணை வாங்கி தினமும் தந்நாட்டு மணல் பள்ளத்தாக்கில் கொட்டி வீணாக்கிக்கொண்டு இருந்தால் பெட்ரோல் உலகம் முழுதும் பெட்ரோல் விலை கடுமையாக ஏறி பணக்கார நாடு மட்டுமே வாங்க முடிந்து, ஏழை நாடுகளில் கார் இருந்தாலும் பெட்ரோல் கிடைக்காது அல்லவா..? .
உலகில் எத்தனையோ நாட்டு மக்கள் உணவின்றி தவிக்க காரணம் இது போன்று ஒரு பக்கம் உணவு தேவைக்குப்போக மிகுதியாக ஒதுங்கி விடுதலே என்பதை உலகம் உணர வேண்டும் சகோ..!
உணவு வீணாகுதல் விஷயத்தில் அதனை கஷ்டப்பட்டு உற்பத்தி செய்து வரும் வளரும் நாடுகள் அதனை பணம் கொடுத்து வாங்கிய வளர்ந்த பணக்கார நாடுகளை கண்காணித்து உணவை வீணாக்காமல் எச்சரிக்க வேண்டும் அல்லவா சகோ..!
யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வேறு வேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடிமாமல் குப்பையில் கொட்டுவது என்பது வேறு. இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் நாடுகளில் அதிகபட்சம் நடந்து வருகிறது. ஆனால்... சமைக்கும் பொழுதே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் (எம்மதமாக இருப்பினும்) சிறிதை சேர்த்து சமைக்கச்சொல்கிறது ஈகை குணத்தை வலியுறுத்தும் இஸ்லாம். .
''அபூதர்ரே! நீர் குழம்பு சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக்கொள்வீராக..! அதன் மூலம் உமது அண்டை வீட்டாரை கவனிப்பீராக..!" என்று கருணை நபி (ஸல்...)அவர்கள் தான் தோழருக்கு உபதேசம் செய்தார்கள். (நூல் : முஸ்லிம்)
தோழர் அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட பொழுது, "இதிலிருநது பக்கத்து வீட்டு யூத குடும்பத்திற்கும் கொடுத்தீர்களா..?" என்று கேட்டு விட்டு அண்டை வீட்டாரை எனது வாரிசாக்கி விடுவாரோ என்று எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் என்னிடம் வலியுறுத்திக்கொண்டிருந்தார் என்று நபி (ஸல்...) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களது வீட்டாரிடம் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ) .
ஆக... இந்த வளைகுடா பணக்கார நாட்டு அண்டை வீட்டாரும் செல்வம் படைத்தோராகவே இருந்தால் என்ன செய்வது..?
இந்த பணக்கார வளைகுடா நாடுகளின் அண்டை நாடுகள் ஏழை ஆப்ரிக்க ஆசியநாடுகள் அல்லவா..? அவர்களை இவர்கள் கவனிக்க வேண்டாமா..? .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
"
தனது அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் முஃமினாக (இறை விசுவாசியாக) மாட்டார்.''  - (நூல்-முஸ்னத் அபூ யஃலா)
அதிரை ஃபேக்ட்

Labels:


இன்றைய பெண்களின் முக்காடு!
10TH APRIL, 2012
digg

இன்றைய பெண்களின் முக்காடு!

நபியே நீர், உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண் மக்களுக்கும், முஃமீன் பெண்களுக்கும், அவர்கள் தங்களுடைய தலை முந்தானைகளை இறக்கி கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால் [கண்ணியமானவர்கள் என] அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், கிருபை செய்வோனுமாக இருக்கின்றான். [சூரா அல் அஹ்ஜாப் :59]
அபூபக்கர்(ரழி) அவர்களுடைய மகள் அஸ்மாஃ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அப்பொழுது) அவர்கள் மெல்லிய ஆடை (அணிந்திருந்தனர் அது கண்ட) நபி(ஸல்) அவர்கள் தங்கள் முகத்தை அவர்களை விட்டும் திருப்பிக்கொண்டு அஸ்மாவேநிச்சயமாக பெண்கள் பூப்பெய்திவிடின் அவர்களின் இது, இதைத் தவிர (வேறு எதனையும் பிறர்) பார்த்தல் கூடாதுஎன்று கூறித் தங்களின் முகத்தையும் கைகளையும் சுட்டிக் காட்டினர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) ஆதாரம்: அபூதாவூத்
கீழ்கண்ட கட்டுரையில் வரும் சம்பவங்களும், நபர்களும் உண்மையே அன்றி கற்பனை அல்ல. இக்கட்டுரையில் வரும் சம்பவங்கள், நபர்கள் உங்களை போல் இருந்தால் அதற்கு தாங்களே பொறுப்பு. நாங்கள் அல்ல. நமது சகோதரிகளின் அலட்சியத்தால் அல்லது கவன குறைவால் இது கூட சரியான வார்த்தையாக தோன்றவில்லை. இப்படி கூட நடக்குமா? என்ற எண்ணத்தில் செயல்படுவதால் இப்படி நம்மை எண்ண வைக்கிறது. இதை படித்துவிட்டு சகோதரிகளிடம் இருந்து காரசாரமான அம்பு மழைகளை எதிர்பார்க்கிறோம். நாம் குறை சொல்வது நோக்கமல்ல. நம்மை நாமே பரிசோதனை செய்வதே நோக்கம்.
முக்காடு என்பது தமிழ் பேசும் சகோதரிகளால் பல வண்ணங்களில் துப்பட்டி, அரை துப்பட்டி, முழு துப்பட்டி, கூசாலி துப்பட்டி, புர்கா என்று அழைக்கப்படுகிறது. அதற்கு கற்பனையான வடிவம் கொடுத்து அதை அணிவதையே இஸ்லாமிய உடையாக கருதுகிறார்கள். உண்மையில் இஸ்லாமிய உடை என்று ஒன்று இல்லை. அந்தந்த நாடுகளில் சகோதரிகள் அங்குள்ள தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, இறைத் தூதர் சொன்ன வழியில் அணிவதே இஸ்லாமிய உடையாகும். முகம், இரு கைகள் மட்டும் தெரிய மற்ற உடல் உறுப்புகளை மறைப்பது, இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது அனைத்தும் இஸ்லாமிய உடையாகும். அது எந்த வண்ணத்தில், வடிவில் இருந்தாலும் சரியே. இக்கட்டுரையின் பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் அதே வார்த்தையை பயன்படுத்துகிறோம். உண்மை நிலையை உணர்த்தவே இவ்வாறு அழைக்கிறோம்.
முக்காடு இடுதலை பலவகையாக பிரிக்கலாம். அவற்றில் சிலவற்றை மட்டும் காண்போம்.
1.பார்த்தால் முக்காடு
இக்காட்சியை பெரும்பாலான இடங்களில் காணமுடியும். மாற்று மத நபர்களுடன் (ஆண்கள் உட்பட) பேசிக்கொண்டு இருப்பார்கள். முக்காடு இருக்காது. யாராவது ஒரு தாடியையோ, தொப்பியையோ, கைலியையோ அல்லது முஸ்லிம்களை பார்த்துவிட்டால் போதும். உடனே முக்காட்டை சரியாக இழுத்து போட்டுக் கொள்வார்கள். சகோதரிகளே! முக்காடு உங்களுக்கா!? மற்றவர்களுக்கா!? முக்காடு என்பது முஸ்லிம்களின் கண்களில் இருந்து பாதுகாக்க மட்டும் தானா!? மாற்று மத சகோதரர்களின் கண்களில் இருந்து பாதுகாக்க தேவை இல்லையா !!!
2.கிராமிய முக்காடு
முஸ்லிம் சகோதரிகள், உள்ளூரிலும், அண்டை வீடுகளுக்கும், ஊர்களுக்கும் செல்லும் போது முக்காடு இட்டு போவார்கள். கொஞ்சம் பெரிய நகரங்களுக்கு (திருச்சி, தஞ்சை, மதுரை, சென்னை) போகும் போது முக்காட்டுக்கு மூட்டை கட்டி விட்டு மற்ற இன பெண்களுள் கலந்துவிடுகிறார்கள். தங்களது அடையாளத்தை அறியாத அப்பாவிகள். ஏன்!? முக்காடு கிராமங்களுக்கு மட்டும் தானா!?
3.கிழடு கட்டை முக்காடு
இக்காட்சியை நகர் புறங்களில் காணலாம். முக்காடு அவசியம் தேவைப்படும் இளம் சகோதரிகள் அதை மறந்துவிட்டு (!) ஹாயாகபோய்க்கொண்டு இருப்பார்கள். முக்காடு அவசியம் தேவைப்படாத வயதான பெண்மணிகள் முக்காடு இட்டு செல்வார்கள். அதற்கு இளம் நங்கையர் சொல்லும் காரணம். முக்காடு எல்லாம் பத்தாம் பசலி தனம். அது எல்லாம் இக்காலத்துக்கு பொருந்தாது!
4.சீருடை முக்காடு (Uniform)
இது மார்க்க கல்வி, பள்ளிவாசல்கள், இறந்தவர்களின் வீடுகள் என செல்லும்போது மட்டும் பயன்படுத்துவார்கள். (குழந்தை பள்ளிக்கு செல்லும்போது மட்டும் அணியும் சீருடை போல) மற்ற நேரங்களில் அதை அப்படியே மாட்டி வைத்து விடுவார்கள். முக்காடும் சீருடையாகி விட்டதா!?
5.சவுதி முக்காடு
இவர்கள் சவூதி அல்லது  மற்ற முஸ்லிம் நாடுகளில் வசிக்கும்போது அந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு முக்காடிட்டு இருப்பார்கள். அவர்கள் அந்தந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளுக்கு  செல்லும்போது அந்த பழக்கத்தை அங்கேயே விட்டு விட்டு வந்துவிடுவார்கள், ஏன்? மன்னர் போடும் சட்டங்களுக்கு அடிபணியும் சகோதரிகள் அந்த மன்னனை படைத்த அல்லாஹ்வின் கட்டளையை மீறுவது ஏனோ?
6.ஏர்போர்ட் முக்காடு
இது வெளிநாடு செல்லும் சகோதரிகளிடம் காணப்படுகிறது. சகோதரிகள் தங்களது சொந்த வீட்டை விட்டு (தமிழகத்தில்) புறப்படும் போது முக்காடு இட்டு ஏர்போர்ட் உள்ளே நுழையும் வரை போட்டு இருப்பார்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு முக்காட்டை அப்படியே கழற்றி வந்தவர்களிடம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். மீண்டும் வெளிநாட்டில் இருந்து வரும் போது முக்காடு ஏர்போர்ட்டில் இருந்து தொடங்கும். வெளிநாட்டில் முக்காடு இட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இது இவர்கள் சொல்லும் காரணம்.
இப்படி முக்காடு இடுதலை பலவகையாக காணலாம். முக்காடு போடும் பெரும்பாலான பெண்கள் (அனைவரும் அல்ல) தாங்கள் முக்காடு போடாவிட்டால் கிழடு, கட்டைகள் ஏதாவது சொல்வார்கள், நினைப்பார்கள் என ஒரு சமுதாய அங்கீகாரத்துக்காகவே போடுகிறார்கள், முக்காடு தங்களது தற்காப்புக்காகத்தான் என்பதை எத்தனை பேர் உணர்கிறார்கள். உண்மையில் பாலியியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்களில், முக்காடு இட்ட பெண்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஒளிவு மறைவு அற்ற சுதந்திரமாக வாழும் நாடுகளில் ஒழுக்க கேடுகளின் பட்டியலை எழுதினால் அது நீண்டு கொண்டே போகும்.
கல்யாணமில்லா குடும்பங்கள், தகப்பன் இல்லா குழந்தைகள், தகப்பன் பெயர் அல்லா முகமறியாத குழந்தைகள், பாசத்திற்கு அழும் குழந்தைகள், பிஞ்சிலே பழுத்த கிழங்கள், மணமாவதற்கு முன்பே குடும்ப உறவு காதல் பெயரில், முதியோர் இல்லங்கள் இப்படி எத்தனை எத்தனையோ…..
முக்காடு என்பது நம்மை தனிமைப்படுத்தவோ, அடையாளம் காட்டவோ அல்ல. தன்னுடைய பாதுகாப்புக்கு இறைவன் வழங்கியுள்ள சாதனம் என்பதை நாம் ஏன் உணர தவறிவிட்டோம்.!?
படித்த நமது சகோதரிகள் அடிமை தனம், ஆண் வர்க்கத்தின் ஆதிக்கம், பத்தாம் பசலித்தனம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
நவ நாகரீகமான சுதந்திரமான அமெரிக்க குட்டை பாவாடையுடன் வாழ்ந்த ஒரு பெண் இஸ்லாத்தை தழுவிய பின்பு, முக்காட்டை பற்றி கூறிய கூற்று:- குட்டை பாவாடையுடன் சுதந்திரமாக சுற்றி வந்த போது கிடைக்காத சுதந்திரம் முக்காடு போட்ட பின்பு தான் கிடைத்தது என கூறுகிறார்.
உயர்ந்த பொருளைத்தான் பாதுகாப்பாக வைத்திருப்போம். வைரத்தை தான் பட்டு துணியில் சுற்றிபாதுகாப்பாக வைப்பார்கள்.கற்களையோ ,கூலாங்கற்களையோ அல்ல. இஸ்லாத்தில் பெண்களுக்கு மிகுந்த சிறப்பான ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.அதை உணர்ந்து, நீங்கள் வைரம் என்றால் முக்காடு இடுங்கள். இல்லை..இல்லைநாங்கள் கூலாங்கற்கள் என்றால்…  சகோதரிகளே நீங்கள் வைரமா ??? கூலாங்கற்களா !!!!
பெண்ணே, முக்காடு என்பது உனக்காக, உன் பாதுகாப்புக்காக என்பதை நீ உணராத போது நீ ஏன் பிறருக்காக முக்காடு போடுகிறாய். அது உனக்கு அல்லாஹ் வழங்கியுள்ள கொடை என்று நீ அறியாத வரை அதை போடாதே என சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால் உணர்ந்து போடு என்று கூறத்தான் ஆசைப்படுகிறேன்.
அபூ முஹம்மது, சிங்கப்பூர்

Labels:


முட்டை தினமும் சாப்பிடலாமா?
3RD APRIL, 2012
digg
அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இவர்கள் உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதய நோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை. எனவே, இதயநோய் அபாயமும் இல்லை.
முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை. ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்திற்கு எந்தவிதமான கெடுதலையும் செய்யாது என்கிறது ஹார்வார்டு பள்ளி.
சரிவிகித உணவு சத்துணவுத் திட்டம் தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்கவேண்டாம். முட்டையில் கெட்ட கொலாஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, கெட்ட கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்திற்குப் பாதுகாப்பான ஃபோலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் (Unsaturated fat) முட்டையில் உள்ளன என்கிறார் டாக்டர். டொனால்ட் மெக்மைரா.
1976ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இது 2 வருட ஆய்வு. இது போக, 1986ஆம் ஆண்டு முதல் அமெரிக்க பல் டாக்டர்கள், கண் டாக்டர்கள், மிருக வைத்தியர்கள் என தினமும் முட்டை சாப்பிட்டனர். இந்த டாக்டர்களிடம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கேள்வி கேட்கப்பட்டது. இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு, கடந்த 12 ஆண்டுகளில் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.
80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவக் குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவக் குறிப்பேடுகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்று உறுதியாகத் தெரிவிக்கிறது.
சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். இதில் வெண்ணெய், பன்றிக்கறி, பாம் ஆயில் போன்றவை சேர்த்துக் சாப்பிட்டால் கெடுதல்தான். ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுதான் கொலஸ்ட்ரால் நம் உணவில் சேரலாம். ஒரு முட்டையில் 213 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது. இதுவே இதயத்துக்கு நலம் பயக்கும்.
நீரழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைப்படி வாரம் ஒரிரு முட்டை சாப்பிடலாம்.
மற்றவர்கள் முட்டையைக் கண்டு பீதி கொள்ளாமல் சிறந்த சத்துணவாக முட்டையை தினமும் உணவில் சேர்த்து, வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள் என்று அமெரிக்கன் எக் போர்ட்டின் நியூட்ரிஷியன் சென்டர் அறிவிக்கிறது.
நன்றி: கீற்று.காம்

Labels: