Monday 23 April 2012


உணவை வீணாக்காதீர்கள்..!
13TH APRIL, 2012
digg

உணவை வீணாக்காதீர்கள்..!

சவுதியில் ஏறத்தாழ 25 வருடங்கள் இருந்த காலங்களில் கீழ்கண்டுள்ள வகையிலான பல விருந்துகளில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. விருந்தின் போது மித மிஞ்சிய உணவு வகைகளைக் கண்டு நெஞ்சம் அழுததுண்டு. இறைவன் அங்கு செல்வத்தை வாரி வழங்கியுள்ளான். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு இன்று வரை தெரியாதது தான் உண்மை. ரமலான் காலங்களில் காலையில், குடியிருப்பு பகுதியிலுள்ள குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழியும் பல வகையான மிஞ்சிய உணவுகளால். இதைப் பற்றி ஏற்கனவே நான் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறேன். இனி தொடர்ந்துப் படியுங்கள். ஒரு கொசுறு செய்தி: சவுதியில், பெண் பிச்சைக் காரர்கள் கூட கை முழுக்க தங்க? வளையல்கள் அணிந்து கொண்டு பிச்சை எடுப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஹூம்..இப்படியும் செல்வம் பொங்கி வழியும் ஒரு உலகம்…..இதற்கு அண்டை நாடான ஆப்ரிக்காவும் வேறொரு உலகம்(வறுமை வாட்டியெடுக்கிறது அங்கு)
உணவை வீணாக்காதீர் ..!
பொதுவாக அரபிகள் தங்களுக்கு எவ்வளவு தேவையோ அதற்கும் மிஞ்சித்தான் உணவை சமைக்கிறார்கள் அல்லது ஓட்டலில் ஆர்டர் கொடுத்து வாங்குகிறார்கள். சாப்பிட்டது போக எஞ்சியது இறுதியாக குப்பைக்கே போகிறது.  மேலும் உணவு சமைக்கவோ அல்லது ஓட்டல்களில் ஆர்டர் செய்யும்போதோ படு ரிச்சான உணவு வகைகளையே நாடுகின்றனர். அதிலும் ரமளான் என்றால் கேட்கவே வேண்டாம்..! உணவு மிஞ்சிப்போதல் மற்ற மாதங்களைவிட இப்போதுதான் கூடுதலாகிறது..!  இவையெல்லாம் வெறும் பெருமைக்காக செய்யப்படுவதாகவே நான் உணர்கிறேன்.
ரமலானில் வளைகுடா நாடுகளில் உள்ள உணவு வீணாக்கல் பற்றி சில நாட்களுக்கு முன்னர் வந்த அரப் நியுஸும் அதற்கு முன்தினம் வந்த யாஹூ நியுஸும் இதையேதான் உறுதிப்படுத்தியது. துபாயில் ரமளானின் ஒவ்வொரு நாளும் 1850 டன் உணவுப்பொருட்கள் வீணாக்கப்படுகின்றதாம்..!இதுவே அபுதாபியில் 500டன் என்றஅளவுக்கு வீணாக்கப்படுகின்றதாம்..! பொதுவாக அமீரகத்தில் ரமளானில் 15 முதல் 20 % உணவு மற்ற மாதங்களை விட அதிகம் வீணாகிறது என்கிறது அந்த செய்தி. .
UAE Red Crescent அமைப்பு என்ன செய்கிறது எனில், இது போன்ற தேவைக்கு மிகுதியான கைவைக்கப்படாத உணவை, பிரிக்கப்படாத ஓட்டல் உணவு ஆர்டர்களை அப்படியே எடுத்துச்சென்று தேவைப்படுவோருக்கு கொடுத்து விடுகிறதாம். இதுபோன்று கடந்த ரமளானில் மட்டும் 24,535 ஹாட் மீல்ஸ் அயிட்டங்களை தேவையுடைய ஆயிரம் குடும்பத்திற்கும் பத்தாயிரம் தொழிலாளர்களுக்கும் உடனடியாக சப்ளை செய்துள்ளதாக அந்த அமைப்பின் இயக்குனர் தெரிவிக்கிறார். .
The General Authority of Islamic Affairs and Endowment (Awqaf) என்ற அமைப்பு தங்கள் "Think before you waste"என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை ஜும்மா சொற்பொழிவுகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இதை ஒரு முடிவுக்கு கொண்டு வர புறப்பட்டுள்ளனாராம். .
உலகில் கோடான கோடி மக்கள் பட்டினியால் வாடும்போது அல்லாஹ் உங்களுக்கு நிறைவான உணவை வழங்கியிருக்கும்போது அதனை வீண் விரயம் செய்வது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை இவர்கள் உணரவேண்டும்..!
வீம்புக்காக விண்ணை முட்டும் அதிஉயர ஆடம்பர சொகுசு மாளிகைகளை கட்டிக்கொண்டு வீண்விரையம் செய்வோரை மிகக்கடுமையாக சாடுகிறது இஸ்லாம்.
இவர்களைப்பற்றி தன் திருமறையில் இறைவனின் எச்சரிக்கை யாதெனில்...
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை (வீணாக) செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன் (அல்குர்ஆன் 4:36)
வீண் விரையம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன் 6:141)
உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்7:31)
மனிதர்கள் எந்த அளவுக்கு எளிமையாக இருக்க வேண்டுமானால்... சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழும் சிறு துண்டு உணவைக்கூட எடுத்து துடைத்து விட்டு சாப்பிடச்சொல்கிறது இஸ்லாம். இதுபற்றி இறைத்தூதர் நபி(ஸல்...) அவர்கள் கூறியிருப்பதாவது...
''உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒருத் துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும் அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம்" என்று நபி (ஸல்...)அவர்கள் அறிவுருத்தினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்கள்: முஸ்லிம், அஹமத், அபூதாவூத், திர்மிதி)
இப்படி சொல்லப்பட்ட ஒரு மார்க்கத்தில் இருப்பதாக கூறிக்கொண்டே இந்த அளவுக்கு இவர்கள் உணவுபொருட்களை வீணடிக்கின்றனர் எனில் அதற்கு காரணம் இவர்களிடம் தலையில் ஏறி அமர்ந்திருக்கும் செல்வச்செருக்கு அன்றி வேறென்ன..? இதைக்கூட நபி(ஸல்...) அப்போதே சொல்லிக்காட்டியும் விட்டார்கள்.
வறுமையைப் பற்றி பேசிக் கொண்டும், அதுபற்றி அச்சம் தெரிவித்துக் கொண்டும் நாங்கள் இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி வந்து 'வறுமையை (நினைத்தா) அஞ்சுகிறீர்கள்? எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக (வருங்காலத்தில்) இந்த உலக(த்துச் செல்வ)ம் ஒரேயடியாக உங்கள் மீது பொழியப்படும்! உங்களின் உள்ளத்தை (நல்வழியை விட்டும்) ஒரேயடியாக திசை திருப்பிவிடக் கூடியதாகத் தான் அந்தச் செல்வம் அமையும். ... .... என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:இப்னுமாஜா)
''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனையுண்டு. என்னுடைய சமுதாயத்திற்கு செல்வம் சோதனையாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் இயாஸ் (ரலி) (நூல்கள்: திர்மிதீ 2258, அஹ்மத் 16824)
'அவர்கள் வாங்குகிறார்கள்... அவர்கள் வீணடிக்கிறார்கள்... நமக்கென்ன' என்று நாம் சும்மா இருக்க முடியாது சகோ..! .
இப்பதிவின் மூலம் சொல்ல வருவது யாதெனில்...
உணவு என்பது இவ்வுலகுக்கு இறைவனின் அருட்கொடை. அது ஒரு பொதுச்சொத்து. அதை அவர்கள் மிகுதியாக வாங்கி இறையச்சமின்றி வீணடித்தால் அதன் பிரதிபலிப்பு ஏழை நாடுகளில் பட்டினிச்சாவில் தெரியும்.
பெரும்பணக்கார நாடு ஒன்று பேரல்பேரலாக இவர்களிடம் கச்சா எண்ணை வாங்கி தினமும் தந்நாட்டு மணல் பள்ளத்தாக்கில் கொட்டி வீணாக்கிக்கொண்டு இருந்தால் பெட்ரோல் உலகம் முழுதும் பெட்ரோல் விலை கடுமையாக ஏறி பணக்கார நாடு மட்டுமே வாங்க முடிந்து, ஏழை நாடுகளில் கார் இருந்தாலும் பெட்ரோல் கிடைக்காது அல்லவா..? .
உலகில் எத்தனையோ நாட்டு மக்கள் உணவின்றி தவிக்க காரணம் இது போன்று ஒரு பக்கம் உணவு தேவைக்குப்போக மிகுதியாக ஒதுங்கி விடுதலே என்பதை உலகம் உணர வேண்டும் சகோ..!
உணவு வீணாகுதல் விஷயத்தில் அதனை கஷ்டப்பட்டு உற்பத்தி செய்து வரும் வளரும் நாடுகள் அதனை பணம் கொடுத்து வாங்கிய வளர்ந்த பணக்கார நாடுகளை கண்காணித்து உணவை வீணாக்காமல் எச்சரிக்க வேண்டும் அல்லவா சகோ..!
யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வேறு வேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடிமாமல் குப்பையில் கொட்டுவது என்பது வேறு. இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் நாடுகளில் அதிகபட்சம் நடந்து வருகிறது. ஆனால்... சமைக்கும் பொழுதே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் (எம்மதமாக இருப்பினும்) சிறிதை சேர்த்து சமைக்கச்சொல்கிறது ஈகை குணத்தை வலியுறுத்தும் இஸ்லாம். .
''அபூதர்ரே! நீர் குழம்பு சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக்கொள்வீராக..! அதன் மூலம் உமது அண்டை வீட்டாரை கவனிப்பீராக..!" என்று கருணை நபி (ஸல்...)அவர்கள் தான் தோழருக்கு உபதேசம் செய்தார்கள். (நூல் : முஸ்லிம்)
தோழர் அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட பொழுது, "இதிலிருநது பக்கத்து வீட்டு யூத குடும்பத்திற்கும் கொடுத்தீர்களா..?" என்று கேட்டு விட்டு அண்டை வீட்டாரை எனது வாரிசாக்கி விடுவாரோ என்று எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் என்னிடம் வலியுறுத்திக்கொண்டிருந்தார் என்று நபி (ஸல்...) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களது வீட்டாரிடம் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ) .
ஆக... இந்த வளைகுடா பணக்கார நாட்டு அண்டை வீட்டாரும் செல்வம் படைத்தோராகவே இருந்தால் என்ன செய்வது..?
இந்த பணக்கார வளைகுடா நாடுகளின் அண்டை நாடுகள் ஏழை ஆப்ரிக்க ஆசியநாடுகள் அல்லவா..? அவர்களை இவர்கள் கவனிக்க வேண்டாமா..? .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
"
தனது அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் முஃமினாக (இறை விசுவாசியாக) மாட்டார்.''  - (நூல்-முஸ்னத் அபூ யஃலா)
அதிரை ஃபேக்ட்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home